இலவச ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கத் தவறினால் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: கல்வித்துறை எச்சரிக்கை.

25 சதவீத இலவச இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கத்தவறினால் சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி அனைத்து சுயநிதி பள்ளிகளிலும் அறிமுக வகுப்புகளில் (எல்.கே.ஜி. மற்றும் 6-ம் வகுப்பு) 25 சதவீத இடங்கள் நலிவடைந்த பிரிவினரான தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற மாணவர்கள், எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்டோரின் பிள்ளைகள், சுகாதாரமற்ற பணி செய்வோரின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண்டுவருமானம் 2 லட்சத்துக்கும் குறைவானவர்களின்(அனைத்து சாதியினருக்கும் பொருந்தும்) பிள்ளைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்காக மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு விண்ணப்ப படிவங்களை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் கொடுத்திருந்தது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 105 மெட்ரிக்.பள்ளிகளில் 3 பள்ளிகள் மட்டுமே 25 சதவீத இலவச இடங்களில் நலிவடைந்த மாணவர்களை சேர்த்தது, பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லையென்று கூறி விட்டன. இதனால் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம் மூலமாக மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்க மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டதன்பேரில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலும், முதன்மை கல்வி அலுவலகத்திலும் மாணவர்களுக்குவிண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுயநிதி பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் மாணவர்சேர்க்கை தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அவருடைய வழிகாட்டுதலுடன்அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை நிறைவு செய்யப்பட வேண்டும். எந்த பள்ளியாவது விதிமுறைகளை அனுசரிக்க தவறினால் அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.