இன்று உலக புகைப்பட தினம் - படம் அல்ல பாடம்

புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ம் தேதி, பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 



முதல் படம்:




1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நவீன புகைப்படத்தை எடுத்தார். இது நாளடைவில் அழிந்தது. 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. பல்வேறு அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.


அன்று கடினம்:




முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேற்றமடைந்து விட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.