கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நேற்று நடந்த தமிழ் மன்ற துவக்க விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது : தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் , தமிழை விட்டு தள்ளி நிற்கின்றனர் . ஒவ்வொருவரும் தமிழ் மீது காதல் கொள்ளுங்கள் . விஞ்ஞான கல்வியுடன் , வாழ்க்கையை நெறிப்படுத்தும் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் . வாழ்க்கை முடிவில் நாம் விட்டுச் செல்வது , புகழ்தான் .
வாழும் காலத்தில் நல்லதை செய்யவேண்டும். மாணவர்களின் கவிதைத்திறன் , அவர்களின் முழுத்திறமைகளை வெளிப்படுத்தும் கருவி . சொல்லை மட்டும் அல்ல , அதிலுள்ள பொருளையும் கண்டுபிடித்து , வாழ்க்கைக்கு பயன்படுத்துங்கள் . உலகை புரிந்து வாழவேண்டும் . தமிழை புரிந்து பேசி , பொருளை கண்டுபிடியுங்கள் . குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயரை சூட்டுங்கள் . விடாது உழைத்து வெற்றியடையுங்கள் ; அப்படிப் பெறும் வெற்றிக்கு உரிய மரியாதையை கொடுங்கள் . உழைப்பின்றி , வெற்றி கிடையாது .
வாழ்க்கை என்பது, இன்பம் , துன்பம் , வறுமையை கொண்டது . அனைத்து காலங்களையும் , நிலைகளையும் , நிகழ்வுகளையும் சமமாக பாருங்கள் . நாம் கற்கும் கல்வி , நமது சமூகத்தை மேம்படுத்த வேண்டும் . தாய் மொழியை வணங்காத எவ்விடத்திலும் வெற்றி கிடையாது . அச்சம் தவிர்த்து உண்மையை பேசுங்கள் . உண்மையுடன் செயல்படுங்கள் .
இந்நாடு, உங்களை நம்பியுள்ளது . சினிமா வாழ்க்கை கற்பனையானது . தமிழ் சினிமாவை நம்பாதீர் . அதில் , காதலின் ஒரு பகுதி மட்டுமே காண்பிக்கப்படுகிறது . சமூக வாழ்க்கையை காண்பிப்பதில்லை . காதல் என்பது , கண்ணில் தோன்றி , உள்ளத்தில் முடியும் ஒரு புரிதல் . தியாகம் இன்றி , வாழ்க்கை கிடையாது . விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் .
ஒரு நல்ல ஆசிரியர், தனது மாணவனின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் . குழந்தைகளிடம் பண்பு , பரிவு , இரக்கம் காட்டுங்கள் . தினமும் புத்தகம் படியுங்கள் . புத்தகங்கள் பல நல்ல பண்புகளை நமக்கு கற்றுக்கொடுக்கின்றன . நல்ல வாசிப்பு என்பது நம்மை தூங்க விடாது . தூங்குவதற்கு புத்தகம் தேவையில்லை . வாழ்க்கையை உயர்த்தவே புத்தகங்கள் .
இளம் வயதை பக்குவமாக கையாள வேண்டும். சொற்களை சரியாக பயன்படுத்துங்கள் . சரியான சொற்கள் , பண்பாடு நமக்கு மிகவும் அவசியம் . வாழ்க்கைக்கு தேவையான இங்கிதம் , பண்பாடு ஆகியவற்றை தமிழ் இலக்கியங்கள் கற்றுக்கொடுக்கின்றன .
எந்த நோக்கமும் இன்பத்தை சார்ந்தது. உண்மையான இன்பம் , அறத்தால் வருவது . சத்தியத்தால் கிடைப்பது . நேர்மையான வாழ்க்கையால் வருவது . தவறான வழியில் கிடைக்கும் இன்பம் , நிலைத்து நிற்பதில்லை . பெண்களை மதியுங்கள் . சமமாக கருதி , வாய்ப்பு கொடுங்கள் . இவ்வாறு , கவிஞர் வைரமுத்து பேசினார் .