செய்திகள் கல்வி உதவி தொகை தரும் ஊரகத் திறானாய்வு தேர்வு எழுத வாய்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைக்கு வழிவகுக்கும் ஊரகத் திறனாய்வு தேர்வு செப்டம்பர் 22ம் தேதி நடக்கவிருக்கிறது. அத்தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
 
தமிழகத்தின் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 
இதற்கான, ஊரக திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், செப்டம்பர், 22ம் தேதி இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
 
இதற்கு கடந்த கல்வியாண்டில், கிராமப்புற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படித்து அதில் 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
மேலும், விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்காக, வருவாய்த்துறையினரிடம் இருந்து, வருமான சான்றிதழை பெற்று, ஆன்-லைன் மூலம் டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் ஐந்து ரூபாய், சேவைக்கட்டணம் ஐந்து ரூபாயை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
மாணவ, மாணவியரின் விண்ணப்பம் மற்றும் கட்டணம் குறித்த விவரங்களுடன், ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 5 மணிக்குள், அந்தந்த ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.