இன்று உலக சாக்லேட் தினம்


"சாக்லேட்' -- இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த பொருளாக உள்ளது. 
 
உலகளவில் சாக்லேட் தினம், வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் செப்., 4ம் தேதி உலக சாக்லேட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சாக்லேட் என்பது "கோகோ' மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ் கிரீம்கள் உள்ளிட்டவைகளில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும் சாக்லேட், பல்வேறு இடுபொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும், பக்கவாதத்தை தடுக்க உதவுகிறது, இருதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தயாரிக்கும் முறை:கோகோ மரத்தின் கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவை, சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இனிப்பூட்டப்படாத சாக்லேட், கரும் சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கோகோ தூள் என பல வகைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.